» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!

திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

HostelcollectorGirls.jpg

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் மகளிர் விளையாட்டு விடுதியினைக் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய நோக்கமே பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வழங்கிப் பயிற்சி அளிப்பதாகும். அதனடிப்படையில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் இம் மகளிர் விடுதியில் மதுரை, சென்னை, சேலம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 60 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஆய்வின் போது, இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் வசதிகள், பயிற்சிகள் மற்றும் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது. விடுதி சமையலறைக்குச் சென்று உணவின் தரம், மெனு விபரம் மற்றும் உணவுப் பொருட்கள் தூய்மையான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கப்பட்டது. வீராங்கனைகளுக்கு உடல் வலிமையும் ஆரோக்கியமும் மிக முக்கியம் என்பதால், வழங்கப்படும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுத்தமான முறையிலும் சமைக்கப்பட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

வீராங்கனைகளின் பயிற்சிக்குத் தேவையான அனைத்து கூடுதல் வசதிகளும், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையமும் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையின் வாயிலாக உடனுக்குடன் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூட வசதிகள் குறித்துக் கேட்டறிந்த போது, வீராங்கனைகள் கூடுதலாகக் கழிப்பறை வசதி வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நடைபெற்று வரும் பணிகளுடன் கூடுதலாகக் கழிப்பறை அமைக்க மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.

விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே விளையாட்டுத் துறை இடஒதுக்கீட்டில் சாதிக்க முடியும் என்றும்; ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய போட்டிகள் மற்றும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, விடுதி காப்பாளர்கள், பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வீராங்கனைகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory