» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை

சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)



புதுச்சேரியில் டிசம்பர் 9-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்ட த்தில் 5 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் வருகிற 5-ம் தேதி ரோடு ஷோ நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. என்றாலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து வரும் 9-ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையில், தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். பேசிமுடித்து விட்டு கையில் ஒரு கடிதத்துடன் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், திட்டமிட்டபடி 9-ம் தேதி தவெக பொதுக்கூட்டம் நடக்கிறதா என்று கேட்டதற்கு, "நடக்கிறது” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தை சீர் செய்யும் பணியை தவெக-வினர் நேற்று தொடங்கினர். மழையால் அந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மைதானம் மேடு பள்ளமாக உள்ளது. மண்ணைக் கொட்டி இதையெல்லாம் தவெக-வினர் சீர் செய்து வருகின்றனர்.

என்றாலும் இந்த மைதானத்தில் மேடை ஏதும் அமைக்காமல் பிரச்சாரப் பேருந்தில் இருந்தபடியே விஜய் பேசுவார் என்று தவெக-வினர் தெரிவித்தனர். அதேசமயம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் போலீசார் விதித்துள்ளதாக தெரிகிறது.

மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்காத பகுதியை முழுமையாக மறைக்க வேண்டும். துறைமுகம் செல்லும் சாலையை போக்குவரத்துக்கு விட வேண்டும். கூட்டத்துக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை மட்டும் ‘கியூ.ஆர் கோடு’ முறை மூலம் அனுமதிக்க வேண்டும். விஐபி-களுக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களையும், பொதுமக்களுக்கான தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தயாராக நிறுத்த வேண்டும்.

கார்கள் வந்து செல்ல தனி வழியை ஏற்படுத்த வேண்டும். 5 ஆயிரம் பேரை 10 கேபின் களாக பிரித்து ஒரு கேபினுக்குள் 500 பேர் வீதம் அமர்த்த வேண்டும். அவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory