» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வியாழன் 12, ஜூன் 2025 11:51:22 AM (IST)

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சேலம் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். இதனையடுத்து 8 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலத்திற்கு வரும் முதல்-அமைச்சர், காலை 11 மணிக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
விழாவில் ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகள், கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரையாற்றுகிறார். விழா முடிந்ததும் சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் மதிய உணவு சாப்பிடுகிறார். சிறிது ஓய்வு எடுத்து விட்டு மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்படி திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக பாய்ந்தோடுகிறது.
இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணை தண்ணீர் முப்போக விளைச்சலுக்கும், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் திருச்சி மாவட்டம் கல்லணையை சென்றடையும்.
அணையின் மேல்மட்ட மதகு வழியாக திறக்கப்படும் தண்ணீர், சிறிது நேரத்திற்கு பிறகு அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும். நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை, பவானி உள்ளிட்ட 7 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் அமைக்கப்பட்டு உள்ள மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:24:43 PM (IST)

தூத்துக்குடியில் கொள்ளையர்கள் 4 பேர் கைது : 35 பவுன் நகை, கார் பறிமுதல் - பரபரப்பு தகவல்!!
வெள்ளி 13, ஜூன் 2025 8:00:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு
வெள்ளி 13, ஜூன் 2025 5:34:11 PM (IST)

பொது வெளியில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டாஸ்: ஆளுநர் ஒப்புதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 4:48:02 PM (IST)

கீழடி காட்டும் உண்மை ஆர்.எஸ்.எஸ் ஸ்க்ரிப்ட்டுக்கு எதிரானதாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 13, ஜூன் 2025 4:28:10 PM (IST)

இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள்
வெள்ளி 13, ஜூன் 2025 11:56:58 AM (IST)
