» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரதான குழாய் வால்வு உடைந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீண் - தூத்துக்குடியில் பரபரப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 5:46:21 PM (IST)



தூத்துக்குடியில் பிரதான குடிநீர் குழாய் வால்வு உடைந்ததால் சுமார் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகச் சாலையில் வெளியேறியது. 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்கு வல்லநாடு நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, ராஜாஜி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று மதியம் சுமார் 12 மணி அளவில், ராஜாஜி பூங்கா நுழைவு வாயில் அருகே இருந்த பிரதான குடிநீர் குழாயின் 'வால்வு' எதிர்பாராதவிதமாகத் திடீரென உடைந்தது. இதனால் மேல்நிலைத் தொட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட குடிநீர், மிகுந்த அழுத்தத்துடன் பீறிட்டு வெளியேறியது.

வால்வு உடைந்ததால் சுமார் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகச் சாலையில் வெளியேறியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் குடிநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, தூத்துக்குடி கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சுமார் 15 வார்டுகளுக்குச் செல்லும் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வரும் நீர் விநியோகத்தை முழுமையாக நிறுத்தினர். குழாயில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறிய பிறகு, உடைந்த பழைய வால்வை அகற்றிவிட்டு, புதிய வால்வு பொருத்தும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது.

இந்தச் சீரமைப்புப் பணிகளால் மாநகரின் முக்கியப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வால்வு சரிசெய்யப்பட்டு மீண்டும் குடிநீர் விநியோகம் சீராகத் தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory