» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனிதா ராதாகிருஷ்ணனின் தரக்குறைவான பேச்சு சபை நாகரிகமா? ஸ்ரீநாத் எம்.எல்.ஏ கண்டனம்!

செவ்வாய் 19, மே 2026 8:46:45 PM (IST)

"திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுவெளியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் தவெக அமைச்சரவை சகாக்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நேற்று முன்தினம் திமுகவின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைப் பொதுவெளியில் மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார்.

மேலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் ஒருவரை நோக்கி, 'தூத்துக்குடிக்கு வந்தால் சட்டையைக் கிழிப்பேன்' என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் கொச்சையாகப் பேசியுள்ளார். இதற்கு எனது ஆழமான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்களாக நீங்கள் கற்றுக் கொண்ட அரசியல் சபை நாகரிகம் இதுதானா?"

"நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட வெற்றியானது, திமுகவிற்கு ஒரு பேரிடியாகவும், மிகப்பெரிய மீள முடியாத அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது என்பதுதான் நிஜம். அந்தத் தோல்வி அதிர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல், அவர்கள் இப்படி நாகரிகமற்றுப் பேசுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது போலத் தெரிகிறது.

நாங்கள் தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்து இன்னும் இரண்டு வாரங்கள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள், எங்களின் மக்கள் நலச் செயல்பாடுகளைப் பொறுமையாகக் கவனித்து, அதற்குரிய நேரம் கொடுத்துக் கூட விமர்சனம் செய்வதற்கு அவர்களிடம் அரசியல் பொறுமை இல்லை. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசும்போது, 'குழந்தைகளை வைத்துத் தவெகவினர் பிரச்சாரம் செய்தார்கள்' என்று பழிசுமத்தியுள்ளார். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல.

நீங்கள் மேடை நாகரிகம் சிறிதும் தெரியாமல் தரக்குறைவாக மாற்றுத் திறனாளிகளையும், தலைவர்களையும் விமர்சனம் செய்வது, பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுவது போன்ற மோசமான கலாச்சாரத்தைத்தான் இப்பொழுதுள்ள புதிய தலைமுறை மக்கள் முற்றிலும் விரும்பவில்லை என்பதை நடந்து முடிந்த இந்த வாக்குப்பதிவு முடிவுகள் திமுகவிற்குத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளது."

எக்காலத்திலும் கண்ணியமிக்க தூய்மையான அரசியலை மட்டுமே முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே முதன்மைக் கொள்கையும் நோக்கமுமாகும். எங்கள் கழகத் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் எப்போதுமே சொல்வது போல, மக்களின் உண்மையான தேவைகளைத் துல்லியமாக அறிந்து, அதனை எங்களின் சிறந்த செயல்களில் மட்டுமே காட்டப் போகிறோம்.

திமுகவினர் வைத்துள்ள மோசமான, நாகரிகமற்ற மற்றும் தரக்குறைவான அனைத்து விமர்சனங்களுக்கும் எங்களது நேர்த்தியான மக்கள் பணியே இறுதிப் பதிலாக அமையும். நாங்கள் மிகவும் நேர்த்தியாகவும், கண்ணியமாகவும் மட்டுமே தமிழ்நாட்டில் அரசியல் செய்வோம் என்பதை இந்த நேரத்தில் மாவட்ட மக்கள் முன்னிலையில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory