» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்கத் தடை! – தமிழக அரசு எச்சரிக்கை!

செவ்வாய் 19, மே 2026 11:29:27 AM (IST)

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் பணியில் இருக்கும்போது தங்களது சட்டைப் பையில் கைப்பேசி வைப்பதற்கும், அதனை உபயோகிப்பதற்கும் போக்குவரத்துத் துறை முற்றிலுமாகத் தடை விதித்து இன்று அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் போது ஓட்டுநர்கள் தங்களது கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் கைபேசிகளை வைத்திருக்கக் கூடாது மற்றும் எவ்விதக் காரணத்தைக் கொண்டும் அதனைப் பயன்படுத்தக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்கனவே பலமுறை சுற்றறிக்கைகள் வாயிலாகக் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

இருப்பினும், தற்போதும் பல ஓட்டுநர்கள் தங்களது சட்டைப் பையிலேயே கைபேசிகளை வைத்திருப்பதோடு, பேருந்துகளை இயக்கும் போதே அஜாக்கிரதையாகப் பேசி வருவதாகப் பொதுமக்களிடமிருந்தும், பயணிகளிடமிருந்தும் தொடர்ந்து ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்த வண்ணம் இருந்தன.

இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய தீவிரப் புலனாய்வு மற்றும் ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசியைப் பயன்படுத்திப் பேருந்துகளை இயக்குவதாலேயே, சாலையில் கவனக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது கோரமான விபத்துகளும், தேவையற்ற உயிர் இழப்புகளும் அரங்கேறி வருகின்றன என்பது கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், விபத்துகளை முற்றிலுமாகத் தவிர்க்கும் பொருட்டும் பின்வரும் அதிரடி உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசியைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதனைத் தங்களது சட்டைப் பையில் வைத்திருப்பதும் இனி முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.

ஓட்டுநர்கள் தங்களது கைபேசிகளைப் பேருந்துப் பயணத் தொடக்கத்தின் போதே அணைத்து (Switch Off) தங்களது பைகளில் (Bag) பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தணிக்கையின் போது சிக்கினால் நடவடிக்கை:

பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து இயங்கும் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் போது ஏதேனும் ஒரு ஓட்டுநர் விதியை மீறிக் கைபேசி வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ, அவர் மீது எவ்விதப் பரிந்துரையுமின்றி உடனடியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இச்சுற்றறிக்கை வாயிலாக அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory