» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு - 10% தள்ளுபடி அறிவிப்பு!

சனி 2, மே 2026 12:12:30 PM (IST)



சங்கரன்கோவிலில் ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய பிரம்மாண்ட புத்தகத் திருவிழா தொடங்கியது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சங்கரன்கோவில் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா, அங்குள்ள டிஎன்எஸ்ஆர்எஸ் மஹாலில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவிற்குச் சங்கரன்கோவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் முத்துமுருகன், ரமேஷ், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மருத்துவர் வி.எஸ். சுப்புராஜ், கண்காட்சியினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

கலை, இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாவல், அறிவியல், மருத்துவம் மற்றும் போட்டித் தேர்வுக்கான நூல்கள் என 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தினமும் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவருக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்காகக் கட்டுரை, ஓவியம் மற்றும் திருக்குறள் எழுதும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி, மே 13-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.

தொடக்க விழாவில் ரோட்டரி சங்கச் செயலாளர் ஞானமுருகன், முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, செந்தில்வேல், ஈஸ்வர மூர்த்தி, தலைமையாசிரியர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory