» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்: படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் பலி!
சனி 2, மே 2026 10:25:53 AM (IST)
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில், திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆர். காமராஜ் (38). திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பயிற்சி பெற்ற இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். இதற்காக அவர் தனது குடும்பத்துடன் அங்கு தங்கி வசித்து வந்தார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காமராஜின் அண்ணன் குடும்பத்தினர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர். கடந்த வியாழக்கிழமை காமராஜ், அவரது மனைவி கார்குழலி (38), மகன்கள் புவிதரன் (11), தமிழ்வேந்தன் (5) மற்றும் காமராஜின் அண்ணி, அவரது குழந்தைகள் இருவர் என மொத்தம் 7 பேர் ஜபல்பூரில் உள்ள பார்கி அணைக்குச் சுற்றுலாச் சென்றனர்.
அங்கு அவர்கள் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காமராஜ், கார்குழலி, தமிழ்வேந்தன், காமராஜின் அண்ணி மற்றும் அவரது குழந்தை என மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.காமராஜின் மூத்த மகன் புவிதரன் மற்றும் மற்றொரு குழந்தை ஆகிய இருவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
நீரில் மூழ்கியவர்களில் கார்குழலி மற்றும் அவரது அண்ணியின் உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காமராஜ், தமிழ்வேந்தன் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்த தகவலறிந்த காமராஜின் உறவினர்கள் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் திருச்சிக்குக் கொண்டு வரத் துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகத்தின் உதவியுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் நவல்பட்டு பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு என்.டி.ஏ வழங்கிய முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு - 10% தள்ளுபடி அறிவிப்பு!
சனி 2, மே 2026 12:12:30 PM (IST)

விஜய் வேளாங்கண்ணி வருகை திடீர் ரத்து : திருப்பலி தாமதம், தொண்டர்கள் ஏமாற்றம்!
சனி 2, மே 2026 11:58:31 AM (IST)

மே 11 முதல் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 2, மே 2026 11:12:22 AM (IST)

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வைரலாகும் பதிவு: விஜய்க்கு இளையராஜா மறைமுக வாழ்த்து?
சனி 2, மே 2026 10:52:37 AM (IST)

நெல்லையில் சூறைக் காற்றுடன் திடீர் கனமழை : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன!
சனி 2, மே 2026 8:48:01 AM (IST)


