» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்: படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் பலி!

சனி 2, மே 2026 10:25:53 AM (IST)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில், திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆர். காமராஜ் (38). திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பயிற்சி பெற்ற இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். இதற்காக அவர் தனது குடும்பத்துடன் அங்கு தங்கி வசித்து வந்தார்.

தற்போது கோடை விடுமுறை என்பதால், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காமராஜின் அண்ணன் குடும்பத்தினர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தனர். கடந்த வியாழக்கிழமை காமராஜ், அவரது மனைவி கார்குழலி (38), மகன்கள் புவிதரன் (11), தமிழ்வேந்தன் (5) மற்றும் காமராஜின் அண்ணி, அவரது குழந்தைகள் இருவர் என மொத்தம் 7 பேர் ஜபல்பூரில் உள்ள பார்கி அணைக்குச் சுற்றுலாச் சென்றனர்.

அங்கு அவர்கள் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காமராஜ், கார்குழலி, தமிழ்வேந்தன், காமராஜின் அண்ணி மற்றும் அவரது குழந்தை என மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.காமராஜின் மூத்த மகன் புவிதரன் மற்றும் மற்றொரு குழந்தை ஆகிய இருவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

நீரில் மூழ்கியவர்களில் கார்குழலி மற்றும் அவரது அண்ணியின் உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காமராஜ், தமிழ்வேந்தன் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்த தகவலறிந்த காமராஜின் உறவினர்கள் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைத் திருச்சிக்குக் கொண்டு வரத் துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகத்தின் உதவியுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் நவல்பட்டு பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory