» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை

புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

தென்காசி அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில், சார் ஆட்சியர் மதுரை உயர்நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி விசாரணை நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "கடந்த 7-ம் தேதி எனது மகன் மணிகண்டன் தோட்டத்தில் இருந்தபோது, சீருடை அணியாத காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு வந்தனர். 

கள் இறக்கப்படுகிறதா எனச் சோதனை செய்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், உதவி ஆய்வாளர் எனது மகனை ஆபாசமாகத் திட்டியதுடன், துப்பாக்கியால் அவரது காலில் சுட்டார். இந்தச் சம்பவம் குறித்து முறையாக விசாரிக்காததால், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில்: கள் விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தச் சென்றபோது, மனுதாரரின் மகன் காவல்துறையினரைத் தாக்கியுள்ளார். இதனால் தற்காப்புக்காகவே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இச்சம்பவம் குறித்து சார் ஆட்சியர் தற்போது விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்த பின்பே முழு விவரம் தெரியவரும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தும் சார் ஆட்சியரை உடனடியாகக் காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆஜரான சார் ஆட்சியர், "விவசாயி துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சார் ஆட்சியரின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தார். மேலும், அதுவரை இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory