» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக ஊடகங்களில் கண்ணியம் காக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!

வியாழன் 26, மார்ச் 2026 4:14:26 PM (IST)



தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக வலைதளங்களை மிகுந்த பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் பயன்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத்,   தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று (26.03.2026) நடைபெற்ற ‘வாக்காளர் திருவிழா’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அழைப்பிதழ்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தேர்தல் நாளன்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை மறக்காமல் ஆற்ற வேண்டும். இதற்காக அத்தியாவசியப் பணியாளர்கள் பிரிவின் கீழ் படிவம் 12டி (Form 12D) மூலம் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வாக்களிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.45.98 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவை விடுவிக்கப்படும். வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ.5.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.79 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்பனை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல், குற்றத்தைத் தூண்டும் பதிவுகள் அல்லது தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும், ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களும் (Editorial Boards) சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.



வருகின்ற 28.03.2026 அன்று அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. வேட்புமனுத் தாக்கலின் போது வேட்பாளர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி அனுசியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராஜேந்திர குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory