» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டார்ச் லைட் சின்னத்திலேயே மநீம போட்டியிட அனுமதி: முதல்வருக்கு திருமா கோரிக்கை!

புதன் 25, மார்ச் 2026 5:34:24 PM (IST)



மக்கள் நீதி மய்யம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்து, அவர்களைத் தனிச் சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் தோழமைக் கட்சிகளைப் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்து, அவர்களைத் தனிச் சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் (மநீம) போட்டியிடப் போவதில்லை என்றும், மாறாக திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திடீரென அறிவித்தார்.

இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தரப்பில் குறைந்த அளவிலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும், அவற்றை திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடக் கோரியதுமே இதற்குக் காரணம் என்று கமல்ஹாசன் சூசகமாகத் தெரிவித்தார். அதேநேரம், மநீம-வின் இந்த முடிவுக்கு திமுக தரப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இருப்பினும், திமுகவின் இந்த அணுகுமுறை கூட்டணிக் கட்சிகள் சிலவற்றிற்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:"நடைபெற்று முடிந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

அதேவேளையில், மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சியின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சம் மேலிடுகிறது.

தோழமைக் கட்சிகள் தாமே விரும்பி, கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முன்வந்தால் அதனை ஏற்றுக்கொள்வது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமைக் கட்சிகளை, அவற்றின் விருப்பத்திற்கு மாறாகத் தலைமை வகிப்போரின் சின்னத்தில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல."

'சின்னத்தைக் கட்டாயப்படுத்துவது கூட்டணிக் கட்சிகளின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். தோழமைக் கட்சிகளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகத்திற்குச் செலுத்தும் பெருமதிப்பாகும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், 4% வாக்கு வங்கியும் கொண்ட கமல்ஹாசனை நாம் விட்டுவிடக் கூடாது. அவரை அரவணைத்துச் செல்வதே தங்களின் உயரிய மாண்பாக அமையும்.

தொகுதிகளின் எண்ணிக்கை எதுவாயினும், மக்கள் நீதி மய்யத்திற்கு உரிய தொகுதிகளை ஒதுக்கி, அவர்களின் 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற முழக்கம் முழுமையுறும். இவ்வாறு திருமாவளவன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory