» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட நடவடிக்கை : தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் கோரிக்கை!

திங்கள் 16, பிப்ரவரி 2026 11:43:37 AM (IST)



வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ள புனித வெள்ளியன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நம்பிக்கையான இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் புனித வெள்ளி அன்று, கிறிஸ்தவர்கள் இரத்ததான முகாம்கள் நடத்துதல், சிலுவைப் பாதை ஊர்வலங்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த நாளை ஒரு தியாக நாளாகக் கடைபிடிப்பதால், அன்று மதுக்கடைகளை மூட வேண்டியது அவசியமாகும்.

டெல்லி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் புனித வெள்ளியன்று ஏற்கனவே மதுக்கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல் தமிழகத்திலும் மகாவீர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள் போன்ற தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுவதை வரவேற்கும் ஆயர், அந்தப் பட்டியலில் புனித வெள்ளியையும் சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சருக்குப் பரிந்துரைக்குமாறு ஆட்சியரை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சிறுபான்மையினர் நல ஆணையம் மற்றும் பல்வேறு மதுவிலக்கு இயக்கங்கள் வாயிலாக இந்தத் தொடர் கோரிக்கை தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளைக் குறைத்தல் மற்றும் மது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்டியுள்ள ஆயர், மக்களின் சமய கலாச்சார விழாக்களின் மாண்பைக் காக்க அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவினை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன், தலைமைச் செயலர் சகாய லூரின் மற்றும் மதுவிலக்கு சபை இயக்குனர் ஜெயந்தன் டி கிரேஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory