» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: திருமாவளவன் கருத்து

புதன் 10, செப்டம்பர் 2025 11:20:04 AM (IST)

தவெக தலைவர் விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம், செயல் சுதந்திரம் உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "செங்கோட்டையன் தன்னிச்சையாக கட்சியின் நலனுக்காக குரல் கொடுத்தால் வரவேற்கிறோம், ஆனால் அது பாஜக இயக்கம் என்றால் அதிமுகவுக்கு நல்லதல்ல என்பதை சுட்டி காட்டியிருந்தோம். ஐயப்பட்டது போலவே அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்பதை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்கிறது என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு என் மீது ஆத்திரம் வந்தது. அதிமுகவை தனியே போக விடாமல், கூட்டணியிலும் தனித்து செயல்பட விடாமல் அதிமுகவை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியால் நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் எந்த துணிச்சலில் பேசுகிறார்கள்.

அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் கட்சியில் இருந்து நீக்கியவரை அழைத்து அவர்கள் இருவரும் அரசியல் பேசுவதன் மூலம் அதிமுக மற்றும் அதன் தலைவரை என்ன நினைக்கிறார்கள், என்ன மதிப்பீடு செய்கிறார்கள், எந்தளவுக்கு அதிமுகவை அவர்கள் நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்களும், அதிமுக தொண்டர்களும் உணர வேண்டும். இதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

எங்கள் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறோம். சுமார் 22,000 பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்களை எல்லாம் கணினிமயப்படுத்தியுள்ளோம். விரைவில் 234 தொகுதிகளுக்கு, தொகுதி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்க உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் உள்ளோர் கலந்தோலோசனை செய்து நிர்வாகிகளை நியமனம் செய்வார்கள்.

இந்தப் பணிகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு தான் என்னுடைய மாநில தழுவிய சுற்றுப்பயணத்தை நான் திட்டமிட முடியும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் இப்போதே பயணத்திற்கு தயாராகிவிட்டனர். நாங்கள் உடனடியாக களத்திற்கு இறங்கவேண்டும் என்கிற கட்டாயமோ, அவசியமோ இல்லை. எங்களின் கட்டமைப்பை உறுதிப்படுத்திவிட்டு அதன் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம்.

விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம், செயல் சுதந்திரம் உள்ளது. அந்த வகையில் அவருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த காரணத்துக்காக அவரின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது அல்லது காலம் தாழ்த்தப்பட்டது என்பதை நான் இன்னும் அறியவில்லை. அதை அறிந்த பிறகு சொல்கிறேன்." என்றார்.


மக்கள் கருத்து

சுதந்திரம்Sep 10, 2025 - 02:50:45 PM | Posted IP 172.7*****

மக்கள் நல கூட்டணி வரப்போகிறது,விஜய் காணாமல் போய்விடுவார் ......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory