» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!

சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

குமரி மாவட்டத்தில் இருந்து லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கனிம வளங்களை கொண்டுசெல்லும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது, "கேரளா இந்தியாவில் தான் இருக்கிறது. எனவே, இங்கிருந்து பொருட்களை அங்கு அனுப்பலாம். அங்கிருந்து பொருட்களை இங்குக்கொண்டு வரலாம்" என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை கண்டித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வீடியோ வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதற்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு என்றைக்கும் மனக்குழப்பம் இருந்தது இல்லை. அதே சமயம் பல அழுத்தங்கள் இருக்கின்றன. அது அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியும். குமரி மாவட்டம் வழியாக அதிக பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என்று ஏன் சொல்கிறேன் என்றால், இங்கு அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலைகள் குறுகலாக உள்ளன. 

இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல முடியாது என்பதற்காகத்தான் நான் அமைச்சராக இருந்தபோது தடை விதித்தோம். அந்த தடையை கோர்ட்டு நிறுத்தி வைத்தது. அதன்பிறகு எப்படி கனரக வாகன இயக்கத்தை கட்டுப்படுத்து வது என்பது குறித்து ஆராய்ந்து தான், மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகளை அமைத்தோம்.

இது யாரையும் வஞ்சம் தீர்ப்பதற்காக அல்ல. தற்போதைய அரசும், மாவட்ட நிர்வாகமும் அந்த சோதனைச் சாவடியை எடுக்கவோ, கட்டுப்பாடுகளை தளர்த்தவோ கூடாது என்று தான் வலியுறுத்துகிறேன். பல அழுத்தங்கள் இருப்பதாக கூறினேன். அது எங்கிருந்து வருகிறது என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியும். அந்த அணியை எதிர்ப்பது என்பது எவ்வளவு சவாலானது?. தேர்தலுக்கு முன்பு என்ன நடந்தது என்பதும் தெரியும். அதை பேசினால் தவறாக போய்விடும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory