» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:11:22 PM (IST)



கன்னியாகுமரி - பனாரஸ் (வாரணாசி) காசி தமிழ் சங்கமம்  வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பன்னெடுங்கால தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் வர்த்தக தொடர்பை மேம்படுத்துவது காசி தமிழ் சங்கமம் என்கிற நிகழ்ச்சியை பிரதமர் மோடி முன்னெடுத்தார். இந்த காசி தமிழ் சங்கமம் நான்காம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம் தேதி மாண்புமிகு உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் மத்திய கல்வி அமைச்சர்  திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றிய ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்.  இவரது அறிவிப்பை தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.  இந்த கன்னியாகுமரியிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் புறப்பட்டு சனிக்கிழமை பனாரஸ் போய் சேருகின்றது. மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை பானரஸ் லிருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை கன்னியாகுமரி வந்து சேருகிறது. இந்த ரயில் மதுரை,திருச்சி, செங்கல்பட்டு,  சென்னையில் உள்ள பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சென்னைக்கு செல்ல ஒரு வாராந்திர ரயில் சேவை கூடுதலாக கிடைத்தது.

கால தாமதமாக இயக்கப்பட்டதால் நன்மை: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1990 களில் காசிக்கு வாராந்திர ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை பலமாக வைக்கப்பட்டு வந்தது. அப்போது ஏதோ காரணங்களுக்காக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போய்விட்டது. கன்னியாகுமரியிலிருந்து காசிக்கு சுமார் 25 வருடங்கள் காலதாமதமாக ரயில்  இயக்கப்பட்டதால் ஒரு நன்மை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்கள் வழியாக ரயில் இயங்கி மாநிலத்தின் தலைநகர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுவது நமக்கு சிறப்பு ஆகும்.

இந்த ரயில் அறிவித்து இயங்கும் போது மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை  இருவழி பாதை பணிகள் நடந்து வந்தது. இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் கூடுதல் முனைய வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை  இருந்து வந்தது. இந்த காரணத்தால் இப்போது காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் வாராந்திர ரயில் மட்டுமே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் இயக்க முடிந்தது. 

தற்போது நான்காம் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் அதிக பயணிகளுடன் இரண்டு தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இவ்வாறு தற்போது வாரத்துக்கு இரண்டு ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


தினசரி ரயிலாக இயக்க  கோரிக்கை:தற்போது மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இருவழி பாதை பணிகள் முடிந்து விட்டன. கன்னியாகுமரியில் முனைய வசதிகள் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. 

இந்த நிலையில்  வாரத்துக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வரும் காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கும் படத்தில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு செல்ல ஒரு தினசரி ரயில் சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மொழியின் பெருமை: காசி தமிழ் சங்கமம் ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் தமிழ்நாட்டின் பெருமைகள்,  சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு போன்ற உலக இலக்கியங்களில் முதன்மை பெற்ற படைப்புகள் ,  தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழ்நாட்டு சிறப்பு பெற்ற கோவில்கள்,  செம்மொழி அந்தஸ்து, வளமான இலக்கியங்கள், மற்றும் தனித்துவமான இலக்கண அமைப்பு பழமை வாய்ந்த நூல்கள் பற்றிய விவரங்கள், தமிழ் மொழி சிறப்புகள், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தமிழ் மொழி பயிலும் விதத்தில் எழுத்துக்கள், etc.... போன்றவற்றை டிஜிட்டல் முறையில் பிரிண்ட் செய்து ரயில் உள்ளேயும் வெளியேயும் முழுவதும்  பெட்டிகளில் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது மட்டுமல்லாமல் இந்த ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தமிழ்நாட்டின் அனைத்து வகையான உணவுகளை கண்டிப்பாக உணவு பட்டியலில் இடம் பிடிக்கும் வகையில் இடம்பெற செய்ய வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory