» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!

சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

குளச்சல் அருகே, ஆளில்லாத வீட்டில் திருடப் புகுந்து, அங்கேயே அசந்து தூங்கிய திருடன், ஒரு சிறிய தவறுதலால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகளின் ஊரான மணவாளக்குறிச்சிக்குச் சென்றிருந்ததால், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த ஆரோக்கிய பிரவின் (38) என்பவர், அதிகாலையில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

வீட்டிற்குள் சென்ற ஆரோக்கிய பிரவின், அங்குள்ள மெத்தையைப் பார்த்ததும் திருடும் எண்ணத்தை மறந்து, மின்விசிறியைப் போட்டுவிட்டு அங்கேயே அசந்து தூங்கியுள்ளார். அவர் மின்விசிறி சுவிட்சைப் போடும்போது, தவறுதலாக குடிநீர் மோட்டார் சுவிட்சையும் சேர்த்துப் போட்டுவிட்டார்.

நீண்ட நேரம் மோட்டார் ஓடியதால் தண்ணீர் தொட்டி நிரம்பி, பக்கத்து வீட்டு வளாகத்தில் நீர் வழிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பிராங்க்ளினின் மகள் ஸ்டெபி கிராப்புக்குத் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பட்டுப் புடவைகள் மற்றும் ரூ.1,000 திருடு போயிருப்பது தெரியவந்தது.

திடுக்கிட்டு எழுந்த திருடன், தான் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி அவசர அவசரமாகத் தப்ப முயன்றுள்ளார். அப்போது ஒரு விசித்திரமான செயலாக, தான் அணிந்து வந்த பேண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் ஜீன்ஸ் பேண்டை எடுத்து அணிந்துகொண்டு தப்பியோடியுள்ளார். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் ஒரு நபர் கையில் பையுடன், விசித்திரமான ஆடையுடன் தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஆரோக்கிய பிரவினை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பட்டுப் புடவைகளைப் பறிமுதல் செய்தனர். திருடச் சென்ற இடத்தில் திருடன் குறட்டை விட்டுத் தூங்கியதும், பின்னர் ஆடையை மாற்றித் தப்பியதும் அப்பகுதி மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory