» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு!

வியாழன் 19, ஜூன் 2025 3:31:16 PM (IST)



குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், வலம்புரிவிளை, பட்டகசாலியன்விளை, வட்டவிளை, தெங்கம்புதூர்-சொத்தவிளை, இளங்கடை, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை இன்று மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர்  தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் நோயாளிகளின் வருகை பதிவேடு, அலுவலக பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தொடர்ந்து மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள், பரிசோதனை உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் குறித்து துறை சாரந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வருகைப்புரிந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பணியாளர்களின் கவனிப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது. 

தொடர்ந்து வலம்புரிவிளை குப்பை கிடங்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. 

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை பேணிகாத்திட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் பட்டகசாலியன்விளை பகுதிகளில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறிஞ்சிகுழாய் உடன், அன்றாடம் வெளிவரும் கழிவுநீர்களை இணைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது 

தொடர்ந்து வட்டவிளை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் ரூ.1.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயநலக்கூடம் நேரில் பார்வையிட்டு சமுதாய நலக்கூடத்தின் கட்டமைப்புகள், உணவு அறை, பொருட்கள் வைப்பறை, கழிப்பறை, மின்சாரம், சமையலறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கட்டுமான பணிகளின் தரம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து வட்டவிளை நியாயவிலைக்கடை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் மற்றும் பொருட்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நியாயவிலைக்கடையின் குடும்ப அட்டைத்தாரர்களின் எண்ணிக்கை கேட்டறியப்பட்டது. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகளின் அளவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ரூ.2.81 கோடி மதிப்பில் பொட்டல் -புத்தன்துறை – பள்ளம்துறை கடற்கரை சாலையில் 500 மீட்டர் நீளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.64.68 கோடி மதிப்பில் தெங்கம்புதூர் பொட்டல்விளை பகுதியில் 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக 11,049 வீடுகளில் 30,819 மக்கள் பயனடைவார்கள். இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.10.05 கோடி மதிப்பில் 2 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட 16 மீட்டர் உயரத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் உள்ள 360 குடும்பங்களை சார்ந்த சுமார் 1500 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். 

தொடர்ந்து இளங்கடை பகுதியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மருந்து பொருட்களின் இருப்புகள், பொதுமக்களுக்கு அதிகம் தேவைப்படும் மருந்துகள், மாத்திரைகள் குறித்த விவரங்களை சேகரித்து, அவற்றினை அதிகளவில் பெற்று முதல்வர் மருந்தகத்திற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா தெரிவித்தார்.

ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் சிவகாமி, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பேரூராட்சி உதவி இயக்குநர் இராமலிங்கம், நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அலுவலர் ஆல்பர் மதியரசு, மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் ஜெயஸ்ரீ, தேவி கண்ணன், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory