» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்: 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:51:50 AM (IST)
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பியூஷ் கோயல் உட்பட 3 மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேநேரம் திமுக கூட்டணி பலமாக இருப்பதால், தேர்தலில் திமுகவை தோற்கடிக்க, மெகா கூட்டணியை அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
பாஜக, தமாகா மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மேலும் கட்சிகளை சேர்த்து கூட்டணியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பக்கபலமாக கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, பாஜகவும் தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளையும், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழக தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேசியத் தலைவர், தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தேர்தல் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய துணை தலைவர் வைஜயந்த் பாண்டா எம்பி நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை புதிய பொறுப்பாளர்களாக பாஜக அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழனிசாமியின் நண்பர் பியூஷ் கோயல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த 2019 மக்களவை தேர்தலின் போதும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழக அரசியல் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் என்பதாலும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் நெருங்கி பழகக்கூடிய நண்பர் என்பதாலும், பியூஷ் கோயல் மீண்டும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த முடிவு செய்துள்ள இந்த குழுவினர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் உள்ளிட்டோரையும் மற்றும் ராமதாஸ் - அன்புமணி இடையே நிலவி வரும் பிரச்சினையை சரிசெய்து, இருவரையும் ஒன்றாக இணைத்து ஒன்றுபட்ட பாமகவை கூட்டணியில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், கடந்த முறை அதிமுகவிடம் 20 தொகுதிகளை பெற்ற பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் இந்தக் குழுவினர் ஈடுபடவுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!
வியாழன் 19, மார்ச் 2026 4:57:50 PM (IST)

தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு
வியாழன் 19, மார்ச் 2026 4:41:28 PM (IST)

பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்: முதியவரை கூரியரில் அனுப்ப முயன்ற குடும்பம்!
புதன் 18, மார்ச் 2026 5:52:45 PM (IST)

வரதட்சணைக்காக கொடுமை: 4 மாத கர்ப்பிணி மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!
புதன் 18, மார்ச் 2026 4:59:20 PM (IST)

டெல்லி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:35:53 PM (IST)

வராக்கடன் வெறும் 2% தான்: முத்ரா திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!
புதன் 18, மார்ச் 2026 12:08:12 PM (IST)

