» சினிமா » செய்திகள்

நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது: பிரதமர் மோடி வாழ்த்து

ஞாயிறு 21, செப்டம்பர் 2025 9:58:52 AM (IST)



திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது திரைப்பட கலைஞர்களின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படுகிறது. 1969-ம் ஆண்டு இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக 1954-ம் ஆண்டு முதல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தாதா சாகேப் பால்கே விருது, தேசிய திரைப்பட விருதுகளுடனேயே வழங்கப்படும். 

மேற்கண்ட விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 1-ந் தேதி அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 55-வது தாதா சாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு மலையாள சினிமாவின் முன்னணி திரைப்பட நடிகரான மோகன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்வுக்கமிட்டியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்து உள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் மோகன்லால் மற்றும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் சிவாஜி கணேசன் 1996-ம் ஆண்டிலும், இயக்குனர் கே.பாலச்சந்தர் 2010-ம் ஆண்டிலும், ரஜினிகாந்த் 2019-ம் ஆண்டிலும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது ஒரு தங்கத்தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசை கொண்டது ஆகும். தாதாசாகேப் பால்கே விருதை வென்றதற்காக நடிகர் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் கூறுகையில், மலையாள சினிமாவின் சிறப்பையும் பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டும் ஒரு முன்னணி நட்சத்திரமாக நடிகர் மோகன்லால் விளங்குகிறார். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். மேலும் கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் விளங்குகிறார் என்று கூறியுள்ளார்.

மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் ‘தன்மாத்ரா', ‘த்ரிஷ்யம்', ‘வனபிரஸ்தம்', ‘முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்' ‘புலிமுருகன்' ஆகியவை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களாகும் சிறந்த நடிகருக்கான 2 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் மோகன்லாலுக்கு 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory