» சினிமா » செய்திகள்

சினிமாவில் சிலரே எனக்குத் தடையாக இருக்கின்றனர்: சிவகார்த்திகேயன் பகிரங்கக் குற்றச்சாட்டு!

செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:51:40 PM (IST)

திரைத்துறையில் இருக்கும் சிலரே எனக்குத் தடையாக இருக்கின்றனர் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று (பிப். 23) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், திரைத்துறையில் தான் சந்திக்கும் சவால்கள் மற்றும் தனது நோக்கம் குறித்து மனம் திறந்து பேசினார்.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "சினிமாவில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் என்றுதான் நான் நுழைந்தேன். ஆனால், மக்கள் என்னை ஒரு கதாநாயகனாக உயர்த்தினார்கள். எனக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்த சினிமா துறைக்கு ஏதேனும் ஒரு கைமாறு செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதன் ஒரு பகுதியாகவே, வணிக நோக்கங்களைத் தாண்டித் திறமையானவர்களை உருவாக்கத் தயாரிப்பில் இறங்கினேன். நண்பன் அருண்ராஜா காமராஜை ‘கனா’ மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியது முதல் இன்று வரை அந்தப் பயணம் தொடர்கிறது,” என்றார்.

தனது வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நான் யாருக்கும் போட்டியாளராகவோ, யாரையும் தாண்டிச் செல்லவோ அல்லது யாரையும் காலி செய்யவோ இங்கு வரவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை இப்படியே விட்டுவிடுங்கள்.

நான் எப்போதும் கதைகளைத் தேடித்தான் நடிக்கிறேன்; ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதில்லை. அதனால், வெற்றியோ தோல்வியோ அதில் என் பங்கு நிச்சயம் இருக்கும். எனக்கு மக்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால், திரைத்துறையில் இருக்கும் சிலரே எனக்குத் தடையாக இருக்கின்றனர். அவர்கள் அத்தடையை நீக்கினால், இன்னும் நான்கு சிவகுமார் முருகேசன்களை (புதிய இயக்குநர்களை) என்னால் உருவாக்க முடியும்,” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நடிகர்கள் சரத்குமார், சூரி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory