» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைப்பு!

சனி 8, ஆகஸ்ட் 2026 4:59:44 PM (IST)

எட்டையாபுரம் அருகே பள்ளி ஆசிரியைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்த நபரைப் பொதுமக்கள் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் 47 வயது பெண் ஆசிரியர், தினமும் கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் வந்து இறங்கி பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சிவஞானபுரத்தைச் சேர்ந்தவரும் தற்போது முதலிபட்டியில் வசித்து வருபவருமான கூடலிங்கம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன் (44), அந்தப் பெண் ஆசிரியரை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும், வழியில் அவரை மறித்து ஆபாசமாகப் பேசுவதும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து அச்சுறுத்துவதுமாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

வழக்கம் போல் இன்று பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கு நடந்து சென்ற பெண் ஆசிரியரைப் பின்தொடர்ந்து வந்து முத்துக்கிருஷ்ணன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், முத்துக்கிருஷ்ணனைச் சூழ்ந்து மடக்கிப் பிடித்து எட்டையாபுரம் காவல் நிலையப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பொதுமக்களிடம் இருந்து வாலிபரைக் மீட்ட எட்டையாபுரம் போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், முத்துக்கிருஷ்ணன் பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து அவர்களின் செல்போன் எண்களைக் கேட்டுப் பல பெண்களுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory