» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழநியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி: கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழப்பு!

சனி 8, ஆகஸ்ட் 2026 12:39:13 PM (IST)



பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இப்பாரிய நில மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநியைச் சேர்ந்த சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறையினர் எனப் பலரிடம் சிபிசிஐடி போலீசார் விரிவான விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், நில மோசடியில் ஈடுபட்டதாக வெள்ளத்துரை, வழக்கறிஞர் அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகிய 4 பேரைச் சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரெனக் கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரைச் சிறைத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறையில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்துச் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory