» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளியில் பிரம்பால் அடித்ததில் 10 மாணவிகள் காயம்: ஆசிரியை மீது வழக்குப்பதிவு

செவ்வாய் 28, ஜூலை 2026 7:48:07 AM (IST)

வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேன் மரியசுகந்தி (44) என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி மாலை, இவர் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த வகுப்பறையில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சத்தமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை தேன் மரியசுகந்தி, அந்த வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவிகளைப் பிரம்பால் அடித்துக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குக் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

மாலை வீட்டிற்குச் சென்ற மாணவிகள் நடந்த விவரத்தைக் கூறியதும், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பவித்ரா, சுஜித்ரா ஆகிய இருவரும் வீ.கே.புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பவித்ரா மேல் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு 3 நாட்கள் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்றார்.

சரண்யா, சாய்ஸ்ரீ, ஆஷா, சந்தனமுத்துமாரி ஆகிய மாணவிகள் தனியார் மருத்துவமனையில் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைகளில் வீக்கம் குறையாததால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி அளித்த புகாரின் பேரில், ஆசிரியை தேன் மரியசுகந்தி மீது பி.என்.எஸ் சட்டப் பிரிவு 115(2) மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வீ.கே.புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாணவியின் தாயார் ராஜாத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்ததாவது: "எனது மகள் உட்பட பல மாணவர்களை ஆசிரியை தேன் மரியசுகந்தி பிரம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வீ.கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எனது மகளால் இடைப்பருவத் தேர்வை எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

SivasriJul 29, 2026 - 01:46:27 AM | Posted IP 172.7*****

பிள்ளைகள் கண்டிக்கப்பட வேண்டும்.மாணவ மாணவிகள் பள்ளியில் செய்கின்ற தவறுகள் அதிகமாக உள்ளனர்.ஆசிரியர்களையே தாக்குகின்றனர்.ஒழுக்கம் இருந்தால் தான் மாணவ மாணவிகள் வளர்ச்சி பெற வேண்டும்.அன்று நாம் கண்டிக்கப்பட்டதால் தான் வாழ்க்கை முன்னேற்றம் காண முடியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory