» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் நாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்: சுப. வீரபாண்டியன்
வியாழன் 11, ஏப்ரல் 2024 8:41:03 AM (IST)
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று சுப. வீரபாண்டியன் பேசினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, தூத்துக்குடியில் உள்ள வி.இ. சாலையில் திராவிட இயக்க தமிழா் பேரவை பொதுச் செயலா் சுப. வீரபாண்டியன் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவர் பேசுகையில், "ஒரே நாடு ஒரே தோ்தல் எனக் கூறி ஒவ்வொருவருடைய கலாசாரம், உடைகள் உள்ளிட்டவற்றை பாஜக தீா்மானிக்கும் நிலை வரக் கூடாது. திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வையோடு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பணியாற்றி வருகிறாா்.
செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்ற தீா்மானம், பல ஆண்டுகள் கடந்து முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் சட்டமாக்கப்பட்டது. இன்று அதன் பலனை தமிழகத்தில் உள்ள பெண்கள் அனுபவித்து வருகின்றனா். அதேபோல, பேருந்தில் இலவச பயணம், ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என பெண்களின் வாழ்வாதாரம் உயர திமுக வழிவகை செய்கிறது. எனவே, இத்தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதற்கு திமுக வேட்பாளா் கனிமொழியை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.
திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலா் ஜவஹா், மதிமுக மாநகரச் செயலா் முருகபூபதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் முத்து, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் அகமது இக்பால், திமுக மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், பாலகுருசாமி, சீனிவாசன், கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.