» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி பலி: திருமணமான ஒரே மாதத்தில் சோகம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:10:32 AM (IST)
கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், பைக்கில் சென்ற புதுமணத் தம்பதி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (32). தொழிலாளியான இவருக்கும், இவரது உறவினரான மனிஷா (20) என்பவருக்கும் கடந்த மாதம் (மார்ச்) 25-ஆம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
புதுமணத் தம்பதி இருவரும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, மீண்டும் தங்களது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மனிஷாவை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனிஷா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அபூபக்கர் (31) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே தம்பதி இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கஞ்சம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 11, ஏப்ரல் 2026 5:05:18 PM (IST)

கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை: விபத்துக்கள் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 10:15:37 AM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)


BabuApr 10, 2026 - 10:51:12 AM | Posted IP 104.2*****