» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்கட்டமாக சரிபார்ப்பு பணியை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 3 ஆயிரத்து 786 வாக்குப்பதிவு கருவிகள், 1,765 கட்டுப்பாட்டு கருவிகள், 2,112 வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் ஆக மொத்தம் 7 ஆயிரத்து 663 கருவிகளும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான 789 வாக்குப்பதிவு கருவிகள், 438 கட்டுப்பாட்டு கருவிகள், 536 வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் ஆக மொத்தம் 1,763 எந்திரங்கள், தேர்தல் ஆணையத்திடம் இருந்து கூடுதலாக பெறப்பட்ட 220 கட்டுப்பாட்டு கருவிகள் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 575 வாக்குப்பதிவு கருவிகள், 2 ஆயிரத்து 423 கட்டுப்பாட்டு கருவிகள், 2 ஆயிரத்து 648 வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் ஆக மொத்தம் 9 ஆயிரத்து 646 எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த எந்திரங்களில் பெல் நிறுவன என்ஜினீயர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த முதல் நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும் போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து 9 என்ஜினீயர்கள் வந்து உள்ளனர். இந்த பணியானது ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து தொடர்ந்து நடைபெறும். சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்பார்வையில் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களது பிரதிநிதிகள் மூலம் பார்வையிட வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தனி மாவட்ட அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory