» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் : தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்!
சனி 23, மார்ச் 2024 3:54:35 PM (IST)
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (23.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ள மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, மண்டல அலுவலர்களால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுவது குறித்தும், மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தேவையான ஆவணங்கள் சரிபார்ப்பது மற்றும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு சீரான முறையில் நடத்துவது குறித்தும் விரிவான பயிற்சி மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன், உதவி தேர்தல் அலுவலர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி, கனகராஜ், சுப்புலெட்சுமி, முதன்மை பயிற்சியாளர் மற்றும் தோவாளை தனி வட்டாட்சியர் சுப்பிரமணியம், தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.