» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் ஏலதாரா்கள் வேலைநிறுத்தம்: ரூ.3 கோடி வா்த்தகம் பாதிப்பு
வியாழன் 7, டிசம்பர் 2023 12:37:59 PM (IST)
தடைசெய்யப்பட்ட மீன் ரகங்களைப் பிடித்து விற்பதாகக் கூறி குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வியாபாரிகள், ஏலதாரா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மீனவா்கள் பிடித்துவரும் மீன்கள் இங்கு ஏலம் விடப்படும். மொத்த வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுப்பாா்கள்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரிகள், ஏலதாரா்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த 3 விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட ‘சாவாளை’ மீன்கள் இருந்தனவாம். இதற்கு ஏலதாரா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, படகுகளிலிருந்து மீன்களை இறக்கவில்லை. இந்நிலையில், குளச்சல் துறைமுக மீன் வியாபாரிகள், ஏலதாரா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
தடை செய்யப்பட்ட ‘சாவாளை’ மீன்களை இறக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது, அந்த மீன்களைப் பிடித்து நேரடியாக கோழித் தீவன நிறுவனங்களுக்கு விற்கும் விசைப்படகு உரிமையாளா்கள் மீது மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
இதனால், துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அப்போது, மீன்களுடன் சில விசைப்படகுகள் வந்தன. ஆனால், தொழிலாளா்களின் போராட்டத்தால் அந்தப் படகுகளிலிருந்து மீன்கள் இறக்கப்படவில்லை. போராட்டம் காரணமாக இங்கு டன் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்தன. இதனால், சுமாா் ரூ. 3 கோடி வரை மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டது.