» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்ட பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

வெள்ளி 4, ஜூன் 2021 4:21:04 PM (IST)



குமரி மாவட்ட பாசன வசதிக்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து விட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், பொதுப்பணித்துறையின்கீழ் (நீர் வள ஆதார அமைப்பு) பராமரிக்கப்பட்டு வரும், பேச்சிப்பாறை அணையிலிருந்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், முன்னிலையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், இன்று (04.06.2021) தண்ணீரை திறந்து விட்டு, பின்னர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால், விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்து வருகிறது. 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் பயன்பெறும் விவசாய நிலங்களின் பாசன பயன்பாட்டிற்காக இன்று (04.06.2021) முதல் சுமார் வினாடிக்கு 850 கனஅடி வீதம் இவ்வணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுக்காவிற்கும் சேர்த்து சுமார் 99 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் வழிவகை செய்யும். மேலும், விவசாயிகளிடம் நான் கேட்டுக்கொள்வது, நமது மாவட்டத்தை பொறுத்தவரை நீர் ஆதாரங்கள் அதிகம் இருக்கிறது. ஆனால் விவசாயம் குறைந்துகொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

எனவே, விவசாய பெருமக்கள் இன்னும் அதிகமான இடங்களில் விவசாயங்கள் மேற்கொண்டு, விவசாய வளத்தை பெருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இன்று திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை முதல் சாகுபடி மேற்கொண்டுள்ள (கன்னிபூ) விவசாய பெருங்குடிமக்கள் பயன்படுத்தி அதிக மகசூல் வளம் பெற கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , குளங்களை தூர்வாரும் பணிகளுக்காக சிறப்பு திட்டத்தை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதன் அடிப்படையில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நமது மாவட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ஆக்கிரமிப்பு குளங்களை மீட்டு, தூர்வாரப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.



இந்நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் வி.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), சி.விஜயதரணி (விளவங்கோடு), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), ஊராட்சித்தலைவர் மெர்லியன்ட் தாஸ், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எம்.ஆர்.வாணி, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா, உதவி பொறியாளர்கள் அருள்செழியன், அருள்சன் பிரைட், விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ, பத்மதாஸ், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory