» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானின் அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது: டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

புதன் 25, ஜூன் 2025 4:47:12 PM (IST)

ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. 

மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது: ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.

மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.

இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை. நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory