» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க 2027 ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு: புதிய 'செயலி அறிமுகம்!

செவ்வாய் 19, மே 2026 12:51:15 PM (IST)

ஆதார் அட்டை விவரங்களை இணையதளம் மூலமாகக் கட்டணமின்றி இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதார் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் தனிநபர் விவரங்களில் முறைகேடுகள் மற்றும் மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பெயர் திருத்தம், தந்தை, கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற சமீபத்திய தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக, குழந்தைகள் வளரும்போது அவர்களின் கைரேகைகள், கருவிழிகள் (Iris) மற்றும் பிற பயோமெட்ரிக் (Biometric) விவரங்கள் மாறுபடுவதால், இந்தத் தரவுப் புதுப்பிப்புகள் மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பெயர், பிறந்த தேதி, பயோமெட்ரிக் போன்ற அனைத்து விவரங்களையும் நேரடியாகப் புதுப்பிக்கப் பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதார் பதிவு மையங்களை அணுக வேண்டும். அதேநேரம், தங்களின் இருப்பிட முகவரியை மட்டும் மாற்றுவதற்குப் பொதுமக்கள் https://myadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து ஆன்லைனிலேயே புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் கட்டணமில்லா இலவச சேவைக்கான அவகாசம் முன்னதாகப் பலமுறை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் நலன் கருதி மேலும் ஓராண்டிற்கு மேலாக, அதாவது வரும் 2027 ஜூன் 14-ஆம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

புதிய 'Aadhaar' செயலி அறிமுகம்:

இதற்கிடையே, ஸ்மார்ட்போன் பயனாளர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த பழைய 'mAadhaar' செயலி (App) விரைவில் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது. அதற்கு மாற்றாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 'Aadhaar' என்ற செயலியைப் பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலியில், பயனாளர்கள் தங்களின் தனிநபர் ரகசிய விவரங்களைப் பாதுகாப்பான முறையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக, பிரத்யேக 'க்யூஆர் குறியீடு' (QR Code) வசதி தற்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்பக் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory