» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரம் : சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு பதிவு

திங்கள் 1, டிசம்பர் 2025 8:47:46 AM (IST)

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரத்தில் சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எஸ். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்த கடனுக்கு ‘யங் இந்தியா' நிறுவனத்தில் இயக்குனர்களான காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து அந்த கடன் தொகைக்காக ஏ.ஜே.எஸ். நிறுவனத்தின் ரூ.99.99 சதவீத பங்குகள் யங் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் இந்த விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றப்பத்திரிக்கையை ஏற்பது தொடர்பாக உத்தரவை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார். இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதில் டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, சாம் பிரிட்டோ உள்பட 7 பேர் மீது மோசடி, குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதிய வழக்கு ஒன்றை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி அமலாக்கத்துறையினர் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி கண்டனம்

நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூட இருக்கும் நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் அரசியலைத் கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நேஷனல் ஹெரால்டு விவகாரம் முற்றிலும் போலியான வழக்கு என்றும், இறுதியில் நீதி வெற்றி பெறும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘காங்கிரஸ் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் பா.ஜனதா மீது சுமத்துகிறது. நாங்கள் (பா.ஜனதா) அதை வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் அவர்கள் உரை நிகழ்த்துவதற்குப் பதிலாக, அவர்கள் செய்த கொள்ளைக்கு கணக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory