» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல்: கைதான வாலிபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:45:20 AM (IST)

டெலலியில் முதல்-அமைச்சரை தாக்கிய வழக்கில் கைதான வாலிபரை  5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாஜக ஆளும் டெல்லி அரசின் முதல்அமைச்சராக ரேகா குப்தா இருக்கிறார். இவர் வாரந்தோறும் புதன்கிழமை தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பது வழக்கம். அதன்படி நேற்றும் பொதுமக்கள் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.

முதல்-மந்திரி வீடு, ஷாலிமார் பாக்கில் உள்ளது. முதல்-மந்திரியிடம் குறைகளை தெரிவிக்க ஏராளமானோர் நேற்று காலை வந்திருந்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல்-மந்திரி முன்னால் வந்து தனது கைகளில் இருந்த காகிதங்களை கிழித்து முதல்-மந்திரி மீது வீசினார். தொடர்ந்து முதல்-மந்திரியின் கைகளைப் பிடித்து வேகமாக இழுத்தார்.

இதில் முதல்-மந்திரியின் தலை, அருகில் இருந்த மேஜை மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத நேரத்தில், சில நொடிகளில் இது நடந்து முடிந்து விட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். முதல்-மந்திரி ரேகா குப்தா, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முதல்-மந்திரியை தாக்கிய நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி சகாரியா (வயது 41) என்பதும், அவர் ஒரு நாய் பிரியர் என்பதும் தெரிய வந்தது. சமீபத்தில் தெருநாய்களுக்கு எதிராக வந்த கோர்ட்டு உத்தரவு அவரை மிகவும் பாதித்து இருந்தது. இதனால் மன நல பாதிப்பில் இருந்ததாகவும் தெரிகிறது. ராஜேசின் தாயாரும் இதனை போலீசில் தெரிவித்து உள்ளார்.

ஆனால் முதல்-மந்திரியின் வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது நடவடிக்கையை வேறுவிதமாக காட்டுகின்றன. அவர் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த காட்சிகள் காண்பிக்கின்றன. 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே இந்த சதித்திட்டத்தை அவர் தீட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேஷை டெல்லியின் துவாரகாவில் உள்ள ஒரு நீதிபதியின் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில், குற்றவாளிக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory