» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம்: தோனியை முந்திய ரிஷப் பண்ட்

ஞாயிறு 22, ஜூன் 2025 11:44:26 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. ரிஷப் பண்ட் சதம் அடித்தார்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆண்டர்சன்-தெண்டுல்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சும்பன் கில் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 

தொடர்ந்து ஆடிய சுப்மன் கில், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஷப் பண்ட் சோயிப் பஷீர் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது 7-வது சதத்தை கடந்தார். அவர் சதம் அடித்ததும் மைதானத்தில் பல்டி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஸ்கோர் 430 ரன்னாக உயர்ந்த போது சுப்மன் கில் (147 ரன்கள், 227 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்) சோயிப் பஷீர் சுழலில் தூக்கி அடித்து பவுண்டரி எல்லை அருகில் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு கில்-பண்ட் இணை 209 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த கருண் நாயர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 8 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை ஓங்கி அடித்தார். அதனை ஆலி போப் துள்ளிக்குதித்து ஒற்றை கையால் அபாரமாக கேட்ச் செய்தார்.

நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய ரிஷப் பண்ட் 134 ரன்னில் (178 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) ஜோஷ் டாங்கு பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னிலும், ஜஸ்பிரித் பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னிலும், பிரசித் கிருஷ்ணா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 7 விக்கெட்டுகள் 41 ரன்களுக்குள் சரிந்தன. முகமது சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி களம் கண்ட போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு 40 நிமிடத்திற்கு பிறகு தொடங்கி நடந்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இறங்கினர். முதல் ஓவரிலேயே ஜாக் கிராவ்லி (4 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கருண் நாயரிடம் கேட்ச் ஆனார். இதைத்தொடர்ந்து ஆலி போப், பென் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.  ஓலி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் (134 ரன்) சதம் அடித்தார். 44-வது டெஸ்டில் ஆடும் அவர் அடித்த 7-வது சதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனியிடம் (6 சதம், 90 டெஸ்டில்) இருந்து ரிஷப் பண்ட் தட்டிப்பறித்தார். இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் அடித்த 3-வது சதம் இதுவாகும். இங்கு மற்ற வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் யாரும் ஒரு சதத்துக்கு மேல் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் தனது இன்னிங்சில் 6 சிக்சர்கள் தூக்கி அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பை பெற்றார். ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் இதுவரை 79 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட் டெஸ்டில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் டோனியை (78 சிக்சர்கள்) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய வீரர்களில் ஷேவாக் (90 சிக்சர்கள்), ரோகித் சர்மா (88 சிக்சர்கள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் இருக்கின்றனர்.

லீட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் (101 ரன்), சுப்மன் கில் (147 ரன்), ரிஷப் பண்ட் (134 ரன்) ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 3 இந்திய வீரர்கள் சதம் காண்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2002-ம் ஆண்டு இதே மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி ஆகியோர் சதம் அடித்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory