» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 12:04:38 PM (IST)

நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு அமைச்சர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தும், தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 495க்கும் மேற்பட்டோா் பலியானதாகவும், 1000-க்கும் மேற்பட்டோா் காணாமல் போயுள்ளனா் என கூறப்படுகிறது. மாயமானவர்களை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பேரிடரில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர் என நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை ராதா நகா், ரங்கநாதன் தெருவில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற டிராவல்ஸ் நிறுவனம், 49 போ் யாத்திரை சென்றனா். அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான நிலையில், அவா்களது குடும்பத்தினா் அச்சத்திலுள்ளனா். இதேபோன்று கோவை ஈஷா யோகா மைய குழுவைச் சேர்ந்த 80 பேரும் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களது நிலை குறித்தும் தெரியவில்லை.
ஆன்மிக பேச்சாளா் தேச. மங்கையா்க்கரசி தலைமையில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 150 போ் பாதுகாப்பாக திபெத்தில் உள்ளனா். இது தொடா்பாக தேச.மங்கையா்க்கரசி, தாங்கள் 150 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு விடியோவை வியாழக்கிழமை வெளியிட்டாா். இவா்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 150 பேரும் திபெத்திலேயே தங்கியுள்ளனா் என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.
நேபாள பெருவெள்ள பகுதிகளில் சிக்கியதாக கருதப்பட்டு, தொடா்பற்றுப் போயுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களின் நிலை குறித்து அறிவதற்காக அவா்களின் உறவினா்கள் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை வியாழக்கிழமை இடைவிடாது தொடா்பு கொண்டு விசாரித்தனா். தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் சென்றுள்ளது.
இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் தில்லி சென்றனர்.
இந்த நிலையில், தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் குழு வெள்ளிக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 26 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:32:50 PM (IST)

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:16:28 PM (IST)

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)


