» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:27:51 AM (IST)

சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் கூறிய தேவையற்ற கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார்.
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா அன்புமணி மற்றும் பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இத்தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், நீதி விசாரணைக்கும் கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறை அளித்துள்ள சமாதானப் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் சுட்டது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய்தான்; தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுப்பவர் அவரே என்று அமைச்சர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "ஒரு சில பேருக்கு திடீர் தமிழ் பாசம் வந்துள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய வரலாற்றை நாம் பார்த்திருப்போம்" என்று குறிப்பிட்டதால், திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர்.
அமைச்சர் நிர்மல்குமார் கூறிய தேவையற்ற கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். அவையில் இனி தேவையற்ற கருத்துகளைப் பேச அனுமதிக்க முடியாது என்றும், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் வரம்பிற்குள் மட்டுமே பேச வேண்டும் என்றும் கூறினார். "யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்?" என்று அமைச்சர் நிர்மல்குமாரைக் கண்டித்தார். சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சட்டசபையில் சிறிது நேரம் பெரும் சலசலப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காட்டுப் பன்றிகளைப் பிடிக்கக் கூண்டுகள் தயார் செய்ய ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 4:21:52 PM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

கோவில்பட்டி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:02:34 PM (IST)

அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது: முதல்வர் விஜய் பங்கேற்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:20:23 AM (IST)

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு மையம் : எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 8:54:12 AM (IST)


