» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!

ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

பணகுடி அருகே மொபெட் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அன்னை நகரைச் சேர்ந்த ஜெகதா (44), நெருஞ்சி காலனியைச் சேர்ந்த மரிய விஜயா (42) மற்றும் பாப்பா (50) ஆகிய 3 பெண்களும் அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3.50 மணியளவில், 3 பேரும் ஒரே மொபட்டில் கோழிப்பண்ணைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். 

மொபட்டை ஜெகதா ஓட்டிச் சென்றுள்ளார். பாம்பன்குளம் சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று மொபட் மீது மின்னல் வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், மரிய விஜயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த ஜெகதா மற்றும் பாப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜெகதாவிற்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 2 பெண் தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் பணகுடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory