» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!

வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கண்ணன் என்ற தொழிலாளியைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்த அதிரடிப்படை போலீசார் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புகார்களுக்குத் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களைத் தடுப்பது மற்றும் அவசரக் காலங்களில் போலீசாரைத் தொடர்பு கொள்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அதிரடிப்படை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தங்களின் பிரத்யேக செல்போன் எண்ணை மாணவிகளிடம் பகிர்ந்து, ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவி ஒருவர், தனது பகுதியில் வசிக்கும் தொழிலாளியான கண்ணன் (49) என்பவர் தனக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வருவதாக அந்த சப்-இன்ஸ்பெக்டரின் செல்போன் எண்ணிற்குத் தைரியமாகத் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணை நடத்தி கண்ணனைப் பிடித்தனர். மேலும், இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழிப்புணர்வு எண் மூலம் மாணவி அளித்த புகாரின் பேரில், குறுகிய நேரத்திலேயே குற்றவாளியைக் கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory