» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!

புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)



எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை காரணமாகத் திமுகவுடன் கைகோர்க்க முயன்றதாக அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார் 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக தரப்பில் முன்மொழியப்பட்டது. அதற்கு நாங்கள் (அதிமுக-வின் ஒரு தரப்பு) சம்மதித்தோம். ஆனால், 'நான்தான் முதல்வராகப் போகிறேன்' என்று கூறி எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பை நிராகரித்தார்," எனப் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை காரணமாகத் திமுகவுடன் கைகோர்க்க முயன்றதாகச் சாடிய அவர்:    "திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்குப் பாஜகவும் ஆதரவு அளித்துவிட்டதாக அவரே எங்களிடம் கூறினார்.

தேர்தல் முடிவுகள் வந்த அன்று, திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் என்னிடம் பேசினார்கள். மறுநாள் காலையில் எடப்பாடி பழனிசாமியும் 'திமுக ஆதரவுடன் நாம் ஆட்சி அமைக்கிறோம்' என்று சொன்னார். அப்போதுதான் பின்னணியில் நடக்கும் அரசியல் எனக்குப் புரிந்தது," என்றார்.

தவெக-வுக்கு ஆதரவு ஏன்?

திமுகவின் அரசியலை எதிர்ப்பதாலேயே தாங்கள் தவெக-வுக்கு ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்ட சி.வி. சண்முகம், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியே தொடர்வதாகவும், எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள கடிதங்கள் செல்லாது என்றும் தெரிவித்தார். "கொறடாவை எம்.எல்.ஏ-க்கள் தான் நியமிக்க முடியும், பொதுச்செயலாளர் அல்ல" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

யாருக்குப் பதவி ஆசை என்பதை எடப்பாடி பழனிசாமி தனது மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு ஈபிஎஸ்-ஸின் பிடிவாதமே காரணம்," எனச் சாடியுள்ளார். அதிமுக-விற்குள் ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், அக்கட்சியின் எதிர்காலத்தையும் தமிழகத்தின் அரசியல் சூழலையும் மேலும் சிக்கலாக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory