» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!

திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)


தூத்துக்குடி அரசு செவிலியர் கல்லூரியில், வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) உதவியுடன் 3,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் இந்தப் பெட்டகங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு கனிம வள சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வ.உ.சி துறைமுக ஆணையம் நிதி வழங்கியுள்ளது. இந்தப் பெட்டகத்தில் பாதாம் மிக்ஸ், நெய், உலர் திராட்சை, அத்திப்பழம், அவல் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

"ஒரு பெண்ணின் வாழ்வில் தாய்மை என்பது மிக முக்கியமான காலகட்டம். கரு உருவான நாள் முதல் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் வரையிலான 1,000 நாட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. வேலைக்குச் செல்லும் காரணத்தால் கருத்தரிப்பதைத் தள்ளிப் போடக்கூடாது. சரியான வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கும் போதுதான் குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும் இருக்கும்.

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். மொத்தமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை சிறு இடைவெளிகளில் உணவைப் பிரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் தாய்க்கும் சேய்க்கும் சீரான சத்துக்கள் கிடைக்கும் "தாய் 10 கிலோ வரை எடை அதிகரிக்கும் போதுதான், குழந்தை ஆரோக்கியமான எடையுடன் (சுமார் 3 கிலோ) பிறக்கும். எடை குறைவாகப் பிறந்தால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்."

மனநலம் மற்றும் பராமரிப்பு: "குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் மனச்சோர்வைத் தவிர்க்கத் தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். தானியங்கள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் யாழினி, கோவில்பட்டி சுகாதார அலுவலர் மருத்துவர் வித்யா, உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் சைலஸ் தவமணி, நகர்நல அலுவலர் மருத்துவர் சங்கர்மணி, வ.உ.சி துறைமுக ஆணையச் செயலாளர் மோகன்குமார், சி.எஸ்.ஆர் பிரதிநிதி அமிர்தா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory