» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சனி 15, நவம்பர் 2025 11:14:53 AM (IST)

திரைப்பட இயக்குநர் வி. சேகர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குநர் என பெயரெடுத்தவர், வி.சேகர் (72). அவருக்கு கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். வி.சேகரின் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இயக்குநர் வி.சேகருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க இயக்குநராக திகழ்ந்த வி.சேகர் (73) நேற்று (14.11.2025) மாலையில் போரூர் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெய்வாநத்தம் என்ற கிராமத்தில் பிறந்த வி.சேகர், திருவண்ணாமலையில் தனது இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். மலேரியா ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த வி.சேகர், புகழ் பெற்ற எடிட்டிங் கலைஞர் பி.லெனின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக வளர்ந்து வந்தார்.

இடதுசாரி இயக்கங்களின் மீது ஈர்ப்பு கொண்ட வி.சேகர், தமிழ் தேசியக் கொள்கையின் செயல்பாட்டாளராக திகழ்ந்தார். இவரது இயக்கத்தில் 1988 - 2013 கால கட்டத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சமூகத்தின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, வெற்றிப் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இயற்கை எய்தியுள்ளார். அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மகனுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory