» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ரூ.1 கோடி செலவில் பாரா-விளையாட்டு மைதானம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:57:04 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாரா-விளையாட்டு மைதானத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.8.2025) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாரா-விளையாட்டு மைதானத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, பாரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சிறு விளையாட்டரங்கங்கள், பாரா-விளையாட்டு மைதானங்கள், மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையத்தினை திறந்து வைத்துள்ளார்கள்.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பாரா விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், பாரா-விளையாட்டு அரங்கம், அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து, உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து, பாரா டேபிள் டென்னிஸ், பாரா போச்சியா (Boccia), பாரா டேக்வொண்டோ, பாரா ஜுடோ ஆடுகளம், பாரா கோல்பால் (Goal ball), செஸ், கேரம் ஆகிய விளையாட்டுகளுக்கான பன்னோக்கு உள்விளையாட்டரங்கம், பாரா பளுதூக்குதல் அடங்கிய உடற்பயிற்சிக்கூடம், சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வுதளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாரா விளையாட்டு மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாரா விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு இந்திய அளவிலும், உலகளவிலும் நடைபெறும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று திருநெல்வேலி மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தொடர்ந்து, அண்ணா விளையாட்டரங்கத்தில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தினையும் திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மண்டல முதுநிலை மேலாளர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், கனகராஜ், சங்கர்நகர் பேரூராட்சி உறுப்பினர் முத்துராஜா, பயிற்றுநர்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory