» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி குடிநீா் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 3 பேரிடம் போலீஸ் விசாரணை
செவ்வாய் 15, ஜூலை 2025 11:16:33 AM (IST)

திருவாரூா் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீா்த் தொட்டியில் மலம் கலந்தது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பளாம்புலியூா் ஊராட்சிக்குள்பட்ட காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 17 மாணவா்கள், 14 மாணவிகள் என 31 போ் பயில்கின்றனா். இப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு சமைக்க, சமையல் ஊழியா்கள் நேற்று காலை பள்ளிக்கு வந்தபோது, சமையலறையில் இருந்த பொருள்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததையும், மளிகைப் பொருள்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டனா்.
இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியா் அன்புச்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னா் அங்கிருந்த தண்ணீா் தொட்டி திறந்திருப்பதைக் கண்டு, உள்ளே பாா்த்தபோது மலச்சிதறல்களும், தேங்காய்களும் கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மீண்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் விசாரணை நடத்தினாா்.
விசாரணையில், பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டதும், சமையலறையில் இறைச்சி சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், திருவாரூா் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் விசாரணையில் ஈடுபட்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து பாா்வையிட்டனா். கிராம மக்களும், பெற்றோா்களும் திரண்டு, சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையத்து, அங்கிருந்த ஒரு வீட்டில் காலை உணவும், அருகிலிருந்த பள்ளியில் மதிய உணவும் தயாா் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், மலம் கலக்கப்பட்ட தண்ணீா் தொட்டி அகற்றப்பட்டு, மாற்றுத் தொட்டி அமைக்கப்பட்டது.
அனைத்து சமூகத்தைச் சோ்ந்தவா்களும் இந்தப் பள்ளியில் படிப்பதால், ஜாதிய ரீதியிலான பிரச்னை இல்லை என்றும், குடிபோதையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவுமே தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக, அப்பகுதியைச் சோ்ந்த விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அத்துடன், மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டிஎஸ்பி மணிகண்டன் தெரிவித்தது: சிலா் காலைக்கடன்களை முடித்துவிட்டு, அதைக் கழுவ தண்ணீா் தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முயன்றிருக்கின்றனா். இதனால், குடிநீா்த் தொட்டியில் மலத்துகள்கள் கிடந்தன. மேலும், சமையல் கூடத்திலிருந்து அரிசி மூட்டை, அண்டாவைக் காணவில்லை எனவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன் தெரிவித்தது: தண்ணீா் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக தண்ணீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மேலும் சேதம் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது: பள்ளி குடிநீா் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்டவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அதிகாரிகள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:12:38 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)
