» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொள்ளை வழக்கில் தூத்துக்குடி வாலிபர் உள்பட 2 பேர் கைது: 25 பவுன் நகை மீட்பு!
வியாழன் 14, மார்ச் 2024 10:44:57 AM (IST)
தஞ்சையில், கொள்ளை வழக்கில் தூத்துக்குடி வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை சுந்தரம் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(60). இவர், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 5-ந் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் 352 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் சந்திரசேகர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வல்லம் டிஎஸ்பி நித்யா மேற்பார்வையில் வல்லம் உட்கோட்ட தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சந்திரசேகர் வீட்டில் பதிவான கைரேகைகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் அந்த பகுதியில் சுற்றி வந்தது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த கருப்பசாமி என்கிற பாஸ்கர்(34) மற்றும் மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் காளவாசலை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன்(35) ஆகிய இருவரும் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் 352 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.