» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரசாயன மாம்பழங்கள் விற்பனை: தமிழகம் முழுவதும் தீவிர சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவு!

புதன் 29, ஏப்ரல் 2026 12:20:26 PM (IST)

ரசாயன கற்களைக் கொண்டு செயற்கையாக மாம்பழங்களைப் பழுக்க வைப்பவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முக்கனிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் மாம்பழங்களைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது வழக்கம். குறிப்பாக, சேலம் மாம்பழங்களுக்கு உலகளவில் மவுசு உண்டு. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சந்தைகளுக்கும், சில்லறை விற்பனைக் கடைகளுக்கும் மாம்பழங்களின் வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது.

சில வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில், எத்திலின் அல்லது கால்சியம் கார்பைடு போன்ற அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்தி, மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்குப் புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்:

ரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைத்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

விதிமீறலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பழங்களின் நிறம் மற்றும் தன்மையில் சந்தேகம் இருந்தால், உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறையின் புகார் எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

muthuApr 29, 2026 - 12:50:23 PM | Posted IP 162.1*****

உணவு பாதுகாப்பு துறை தொலைபேசி நம்பரை பொதுமக்களுக்கு தெரிய படுத்தவும். மேலும் மாம்பழத்தை முகர்ந்து பார்த்து வாங்கவும். மாம்பழத்தின் இயற்கையான வாசனை இருந்தால் நல்ல மாம்பழம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory