» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!

வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

நாடு முழுவதும் 109 புதிய ரயில் நிறுத்தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரணியல் மற்றும் குழித்துறையில் ஒரு ரயிலுக்கு கூட புதிய நிறுத்த அனுமதி இல்லை என்று பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/eranielRailway_1769149835.jpgஇதுகுறித்து குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பல்வேறு புதிய ரயில்கள் மற்றும் ரயில் நிறுத்தங்கள் ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே சார்பாக அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 109 ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்களில் புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக அளவு நிறுத்தங்கள் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இவ்வாறு நிறுத்தங்கள் கொடுத்தது என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் படுத்தும் பாடுதான் என்று தான் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு கொடுக்கப்பட்ட நிறுத்தங்களில் புதிய ரயில்களை தவிரமீதமுள்ள நிறுத்தங்கள் அனைத்தும் கோரோனா காலகட்டத்துக்கு முன்பே ரயில்கள் நின்று சென்றது அதை கோரோனா காலகட்டத்தில் பல ரத்து செய்யப்பட்ட நிறுத்தங்கள் ஆகும். இது மட்டுமல்லாமல் 36 பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கும் போது பல்வேறு நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்திய ரயில்வேதுறை கோரோனா காலகட்டத்தில் பயன்படுத்தி ரயில்களின் வேகம் அதிகரிக்கும் பொருட்டு பூஜ்ஜிய காலஅட்டவணை என்ற திட்டத்தின்படி புதிய கால அட்டவணை தயாரித்து வெளியிட்டது. இதன்படி ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் புதிய நேரங்களில், ரயில்களின் வருவாய் குறைவாக உள்ள தேவைப்படாத நிறுத்தங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சில ரயில்கள் குறைவான பயணிகள் ஏறும் இறங்கும் இடங்களில் நிறுத்தப்படுகின்றன, இது பயண நேரத்தை அதிகரிக்கும், இதன் விளைவாக ரயில்கள் தாமதமாக அல்லது பயண நேரம் அதிகமாக இயக்கப்படுகின்றன. பூஜ்ஜிய கால அட்டவணையில் ரத்து செய்யப்பட்ட நிறுத்தங்கள்

1. மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர், நாங்குநேரி, ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு

2. நாகர்கோவில் - கோட்டயம் ரயில் நாகர்கோவில் டவுண், வீராணி ஆளூர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு, தனுவச்சபுரம், அமரவிளை, பாலராமபுரம், நேமம்

3. நாகர்கோவில் - கோயம்புத்தூர் ரயில் தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, பணகுடி, மேலப்பாளையம்

4. சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் 16127-16128 - ஆரல்வாய்மொழி

5. சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி 16723-16724 பணகுடி

6. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் 22621-22622 - நாங்குநேரி (இவ்வாறு ரத்து செய்யப்பட்ட நிறுத்தங்களில் ஒரு சில ரயில்கள் நின்று செல்கிறது)

ரயில்வேத்துறை ஓர் புதிய ரயில் அறிவிக்கும் போது அல்லது நீட்டிப்பு செய்து இயக்கும் போது முதலில் கொடுக்கப்படும் ரயில் நிறுத்தங்கள் நிரந்தர நிறுத்தமாக அறிவிக்கப்படும். அதன் பிறகு புதிய நிறுத்தங்கள் எளிதாக கொடுக்கப்பட மாட்டாது. இவ்வாறு கொடுத்தால் அந்த நிறுத்தங்கள் எல்லாம் தற்காலிக நிறுத்தமாகவே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு குமரி மாவட்டத்தில் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையத்தில் பல ரயில்கள் தற்காலிக நிறுத்தங்களில் நின்று வருகின்றது. புதிய ரயில்களை கேட்டு அழுத்தம் கொடுத்தால் எளிதாக வாங்கிவிட முடியும். ஆனால் ரயில் நிறுத்தங்கள் அவ்வளவு எளிதாக ரயில்வே வாரியம் கொடுத்து விடாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் - கோட்டயம் , கன்னியாகுமரி –மங்களுர் இருமார்க்கமும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இரண்டாவதாக குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் மதுரை – புனலூர் ரயில் இரண்டு மார்க்கங்களிலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் எந்த ஒரு ரயிலுக்கும் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.

இரணியல் ரயில் நிலையம்

திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் இதுவரை நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை. இந்த ரயில் நிலையத்தில் 2017-ம் ஆண்டு முதல் இந்த கோரிக்கை நிலுவையில்; உள்ளது. இந்த கோரிக்கையை சுமார் 9 ஆண்டுகள் ஆகியும் மூன்று எம்.பி கள் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை நிறுத்தம் வாங்க முடியவில்லை. 

இரணியல் ரயில் நிலையத்தில் கடைசியாக புதிய நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு நின்று சென்ற ரயில் அனந்தபுரி ரயில் ஆகும். அதன் பிறகு ஒரு ரயிலுக்கும் நிறுத்தம் புதிதாக கொடுக்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நாகர்கோவில் - மங்களுர் மற்றும் திருவனந்தபுரம் - தாம்பரம் அமித் பாரத் ரயில்களுக்கும் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை.


குழித்துறை ரயில் நிலையம்

தற்போது அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திருவனந்தபுரம் - தாம்பரம் அமித் பாரத் ரயில்களுக்கும் குழித்துறையில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது இது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த ரயில்களில் நாகர்கோவில் - மங்களூர்; வாராந்திர ரயில் குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு நாகர்கோவில் - மங்களுர் ரயில் மாவட்டத்தில் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றால் மாவட்ட பயணிகளுக்கு எந்த வித பயனும் இல்லை. பராமரிப்பிற்காக வேண்டி நாகர்கோவில் வருகிறது என்ற சந்தேகம் உள்ளது. 

நாகர்கோவில் - காந்திதாம் ரயில் மற்றும் திருநெல்வேலி - ஜாம்நகர் ரயில் ஆகிய கொங்கன் பாதையில் செல்லும் இரண்டு ரயிலுக்கும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே நிலுவையில் உள்ளது. ஆனால் ரயில்வேதுறை திருநெல்வேலி – ஜாம்நகர் ரயிலுக்கு குழித்துறை க்கு பதிலாக பாறசாலையில் 2019-ம் ஆண்டு நிறுத்தம் வழங்கியது. ஆனால் இன்றுவரை இந்த ரயிலுக்கு குழித்துறையில் நிறுத்தம் கிடைக்கவில்லை . அப்போது குமரியில் இருந்து மத்திய அமைச்சராக பொன்னார் இருந்தார் அவரும் கூட இந்த நிறுத்தத்தை வாங்க முடியாமல் போனது. குழித்துறை ரயில் நிலையத்தில் கடைசியாக புதிய நிறுத்தம் கொடுக்கப்பட்ட ரயில் கன்னியாகுமரி - கத்ரா வாராந்திர ரயில் ஆகும். அதன் பிறகு ஒரு ரயிலுக்கும் இன்று வரை நிறுத்தம் புதிதாக கொடுக்கப்படவில்லை.

புனலூர் - கன்னியாகுமரி ரயில்

புனலூரில் இருந்து கன்னியாகுமரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நாகர்கோவில் டவுன், ஆளூர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்; என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ரயிலில் கேரளாவுக்கு சென்ற உடன் அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது குறிப்பிடத்தக்கது.

"மயிலே மயிலே இறகு போடு" என்றால் போடாது கன்னியாகுமரி ரயில்வேதுறை வளர்ச்சியில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும், புதிய நிறுத்தங்கள் வேண்டும் என்றால் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக அழுத்தம் மற்றும் முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே கிடைக்கும். இல்லாமல் ரயில்வே அமைச்சரை பார்த்து மனு கொடுப்பது தெற்கு ரயில்வே பொது மேலாளரை பார்த்து மனு கொடுப்பது பாராளுமன்றத்தில் விவாதங்களில் பேசுவது போன்ற எல்லாம் "மயிலே மயிலே இறகு போடு" என்ற பழமொழிக்கு வேலைக்கு உதவாது. 

இதை குமரி குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து தனது நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். இனி காலம் கடந்து விட்டது. புதிய ரயில்களை கேட்டு அழுத்தம் கொடுத்தால் எளிதாக வாங்கிவிட முடியும். ஆனால் ரயில் நிறுத்தங்களை அவ்வளவு எளிதாக ரயில்வே வாரியம் கொடுத்து விடாது. ரயில்வே வாரியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தனது தொகுதிக்கு இது தேவை என்று கூறி இது நிறைவேற்றாமல் நான் இங்கிருந்து நகர மாட்டேன் என்று அந்த அலுவலகத்தின் முன்னால் போராட்டம் செய்தால் மட்டுமே இந்த இன்டர்சிட்டி ரயில் இரணியல் நிறுத்தம் கோரிக்கை ரயில்வே பரிசீலிக்கும். இவ்வாறு தான் கேரளாவை சார்ந்த எதிர்க்கட்சி எம்.பிகள் சாதித்து காட்டுகிறார்கள். இதனால் தேர்தலில் மக்கள் மீண்டும் மீண்டும் இது போன்றவர்களை தேர்வு செய்கிறார்கள்.

குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போது ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். இந்த ரயில்களின் முதல் சேவை அன்று ரயில் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வில்லை என்றால் ரயிலை இயக்க விடமாட்டோம் என்று கூறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இல்லை என்றால் ஒன்றும் வராது - இவ்வாறு அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory