» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குளத்தில் மூழ்கி நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு : புதுக்கடை அருகே சோகம்!!!
ஞாயிறு 7, ஏப்ரல் 2024 7:46:07 PM (IST)
புதுக்கடை அருகே குளத்தில் மூழ்கி நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் தண்டுமணி பகுதி உள்ளது. இங்குள்ள கல்குவாரியில் பாறைகள் பல வருடங்களாக உடைப்பதால் உருவான குளம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று தேங்காபட்டணம், பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மகன் ராஜேஷ் (34), செல்வராஜ் மகன் ஜெகன்ராஜ் (38) ஆகியோர் ஆட்டோவில் தண்டுமணிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அந்த இடத்தில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் பாறை குளத்தில் இறங்கி குளிக்க முயற்சித்த போது கால்தவறி குளத்தின் உள்ளே விழுந்ததில் இருவரும் மூழ்கியுள்ளனர். மாலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் இதை கண்டு புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது இரவு ஆனதால் மீட்பு பணிகள் நடத்த முடியவில்லை.
இதையடுத்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் இன்று காலை குளத்த்தில் மூழ்கி உயிரிழந்த ராஜேஷ், ஜெகன் ஆகியோர் உடல்களை மீட்டனர். இருவர் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் ராஜேஷ் ஆட்டோ டிரைவர் ஆவார். ஜெகன்ராஜ் மினி பஸ் டிரைவர் - இருவரும் நண்பர்கள் ஆகும்.