» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் 6528பேர் அஞ்சல் வாக்கு அளிக்க விருப்பம் : ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்!!
சனி 6, ஏப்ரல் 2024 4:01:39 PM (IST)
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என மொத்தம் 6528பேர் அஞ்சல் வாக்கு அளிக்க உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அஞ்சல் வாக்கு அளிக்க 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3982 பேரும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
மேற்கண்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெற 119 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 08.04.2024, 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு பெறுவதற்கு அலுவலர்கள் குழு வரும் போது வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறையினை தெளிவுபடுத்துவார்கள். மேலும், வாக்காளர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கு ஆட்படாமல் சுயமாக விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். மேற்படி குழுவில் காவல் துறை அலுவலர்கள், நுண் பார்வையாளர் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் உடன் செல்வர்.
மேலும், வாக்குப்பதிவு செய்யவரும் குழுவின் வருகையின் போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து 2-ம் முறையும் இக்குழு வருகை தரும். இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் வாக்குப்பதிவு குழு மீண்டும் வருகை தரமாட்டார்கள். மேலும், அஞ்சல் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.