» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி!

புதன் 21, பிப்ரவரி 2024 12:06:54 PM (IST)



நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைத்து மர்ம நபர்கள் ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. 

பின்னர் டிரைவர் ரயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அ

ப்போது தண்டவாளத்தில் மாட்டின் தலை, கொம்பு மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார். ரயில் கற்கள் மீது மோதிய பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதாக கூறினார்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தண்ட வாளத்தில் கற்களை எதற்காக அடுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றிய தகவல் வந்ததும் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார்.

இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று காலையிலும் சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மதுபோதையில் வாலிபர்கள் கற்களை தூக்கி வைத்தார்களா? ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory