» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் சாவு

ஞாயிறு 18, பிப்ரவரி 2024 8:53:29 AM (IST)

ஆரல்வாய்மொழியில் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த புதுப்பெண் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் அருகில் உள்ள வல்லம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் சென்னையில் உள்ள மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியைச் சேர்ந்த ஷீலா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு கணவருடன் வசித்து வந்த ஷீலா சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 13-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார்.

அந்த ரயில் 14-ந் தேதி காலையில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக ரயில் நிலையத்தில் நிற்காது. ஆனால் அந்த சமயத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் நின்றது. இதனை கவனித்த ஷீலா ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இறங்கினால் சீக்கிரம் வீட்டுக்கு சென்று விடலாம் என நினைத்து இறங்குவதற்கு ஆயத்தமானார். இந்நிலையில் சிக்னல் கிடைத்து மீண்டும் ரயில் புறப்பட்டது.

உடனே அவசர, அவசரமாக ரயிலில் இருந்து ஷீலா கீழே இறங்கினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஷீலாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷீலா வடக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது அன்பரசுவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் ஷீலா படித்த படிப்புக்கு உரிய சான்றிதழை கல்லூரிக்கு சென்று வாங்குவதற்காக சொந்த ஊருக்கு வந்தபோது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியான சோக சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory